Translate

வியாழன், 6 ஜூன், 2013

அயலகத் தமிழர்களின் இணையதள இலக்கியப் படைப்புகள்.

செ.சு.நா.சந்திரசேகரன்
தமிழ்ப் பேராசிரியர்,
ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருநின்றவூர்-602024
சென்னை


        இணைய உலகம் என்பது இன்றைய அறிவியலின் சாதனை உலகமாகக்
கருதப்படுகின்ற ஒன்றாக அமைந்திருக்கிறது.பகலவனின் கதிர் அகிலம் முழுதும்
காணக்கிடைக்கும் அற்புதம் போல் இணையத்தின் பதிவுகள் ஒரே நேரத்தில் உலகை
வலம் வருகின்றன. காற்றின் தன்மை  போல் அறிவின் சுவாசமாக இணையங்களில்
பல்துறை சார்ந்த     பதிவுகள் பதிவிடப்படுகின்றன.அவற்றில் காணலாகும்
இலக்கியப்படைப்புகளை ஆய்வது இன்றைய முக்கியத் தேவையாகிறது.

தமிழ் மொழி பேசும் தமிழ் நிலத்தில் பிறந்து வளர்ந்து அயலக நாடுகளில்
வாழும் தமிழர்கள் தங்கள் இலக்கிய ஆர்வத்தினால் பல்வேறு நிலைகளில்
தமிழ்ப்பணி ஆற்றுகின்றனர்.அவ்வகையில் தகவல் தொடர்பு சாதனங்களில் முன்னிலை
பெற்று விளங்கும் இணையங்களில் தனித்தளம் அமைத்தும்
வலைப்பூக்களில்,தளங்களில் பதிவிட்டும்,பங்கிட்டும்  தமிழ்ப்பணி
ஆற்றுகின்றனர்.இவர்களின் படைப்புகளையும், தளங்களையும் ஆய்வது
இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பூர்வீகத்தின் மரபுகள், பழக்கவழக்கங்கள்,விழாக்கள் போன்றவற்றை நினைவில்
கொள்ளத்  தங்களது படைப்புகளை உணர்ப்பூர்வமாக ஆக்கிக் கொள்கின்றனர்.அவை
வேறு நாடுகளில் வாழும் தனது உறவுகளுக்குப் பயன்பாடாய் அமையலாம் எனக்
கருதுகின்றனர்.

பரந்ததளத்தில் இயங்கும் இணையப் பக்கங்களில் உள்ள இலக்கியப்படைப்புக்களை
ஆய்வு செய்யத் தனிமனித காலம் போதாது.எனவே அயலகத் தமிழர்களின் சில
குறிப்பிட்ட இலக்கியத்தளங்களில் உள்ள படைப்புகளை ஆய்வு எல்லை
கருதிக்காண்போம்.

tamil.do.am

தமிழ்க்காதலன் கு.சா.நீலமணி அவர்களால் நடத்தப்பெறும் "தமில் இலக்கிய இணைய
இதழில் "தமிழ்ப் படைப்புகள் செம்மையாக இருப்பதைக் காணமுடிகிறது.
இலக்கியத்தின் அனைத்துக் கூறுகளையும் கொண்ட தளமாகவும், நூல்களைக் கோப்பு
வடிவத்தில் தரவிவிறக்கம் செய்து கொள்ளத் தக்க வகையிலும்
அமைந்திருக்கின்றன.கவிதைகள்,தமிழ் இலக்கணம்,சங்க
இலக்கியம்,கணினித்தமிழ்,நாவல்கள்,கட்டுரைகள்,திருக்குறள்,புறநானூறு,அகநானூறு,இலவசத்தமிழ்,
இ-புத்தகங்கள்,தமிழ்ப்பேச்சு,சிறுகதைகள் என்பன இலக்கிய முறையிலான
தனித்தனிப் பக்கங்களாகவும்,எம் தமிழ் ஈழம்,இந்து
மதம்,தமிழ்ச்செய்திகள்,வாசகர் படைப்புகள்,வாசகர்பக்கம்,கேள்வி-பதில்
என்பனத் திறனாய்வு அல்லது சமூக முறையிலான தனித்தனிப் பக்கங்களில்
இலக்கியப் படைப்புகள் பதிவிடப்பெற்றிருக்கின்றன.பன்னாட்டுத்தமிழ்ப்
பண்பலை வானொலித் தொடர்பும்  இணைக்கப்பட்டுள்ளது.

திருக்குறளில் 53 அதிகாரங்களுக்குப் பல்வேறு அறிஞர்களின் உரையினைப் பதிவு
செய்துள்ளது ஆய்வாளர்களுக்கும்,படிப்பவர்களுக்கு ஒப்பு நோக்கிப்
படித்தறியும் திறனையும்,பயனையும் தரக் கூடியதாகவுள்ளது.

கவிதை எனும் பக்கத்தில் உள்ள கவிதைகள் அழகான வண்ணப்படங்களுக்கு நடுவே
கல்வெட்டுக்களைப் போல வடிக்கப்பெற்றுள்ளன.அவ்வாறான கவிதைகள்
நவீனபோக்குகளைக் கொண்டதாகவும்,தரமிக்கதாகவும் அமைந்திருக்கின்றன.
அழகியல்,சமூகவியல், பின் நவீனத்துவம்,எதார்த்தவாதம்,அமைப்பியல் எனும்
பல்வேறு கோட்பாடுகளைக் கொண்டதாகவும்
அமைந்திருக்கின்றன.உதாராணமாக,

         "நீ எனக்கு
          முதல் குழந்தை.
          இரண்டாம் தாய்.
          கடைசிக் காதலி."

எனும் கவிதையைக் கூறலாம். எளிமை,அழகு,கருத்து, வியப்பு ஆகியவை
வெளிப்பட்டு நிற்கும் சிறந்த கவிதையாக
எழுதப்பெற்றுள்ளது.மற்றுமொரு கவிதையில் காதலியிடம் காதலன் தன் காதலின்
நயத்தை உணர்த்தும் போது,

         "கம்பிக்குள்
          ஓடும்
          மின்சாரம் போன்றதோ,
          கம்பிக்கு வெளியே
          ஓடும்
          காற்றைப்போன்றதோ  தான்
          என் காதல்.
          ......
          ......
         என்னால்
         காட்ட முடியாது
         ஒரு பிடி காற்றையும்
         கால் கிலோ
         மின்சாரத்தையும்."

என்கின்றார் காதல் இன்னதென்று காட்டமுடியாத கவிஞர்."நீ சம்மதித்தால்"
எனும் கவிதையில்,காதலியோடு நடந்து செல்லும் நினைவுகளை மீட்டிப்
பார்க்கும் காதலன் உச்சக்கட்டமான் உணர்வுகளைத் தனது கவிதையில் குவித்து
வைத்திருக்கின்றான்.அவ்வாறான கவிதையாக,

      "  கால் வலிக்கும்
         வரை....
         உன் விரல்
         பிடித்து நடக்க
         வேண்டும்.
         இரண்டு வயது
         குழந்தையாக....."

எனும் கவிதையைக் கூறலாம். எந்த விதமான சுமைகளும் இல்லாது, பரந்த வான்
வெளியையும், நடப்புகளையும் கண்டுத் துள்ளிக் குதிக்கும் குழந்தை மனதோடு
காதலி தன் கை பிடித்துச்செல்ல வேண்டும் என்ற நினைப்பு இங்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது.காதலியைத் தாயாகப்பாவிக்கின்ற மனப்பக்குவம்
இக்கவிதையில் வெளிப்பட்டு நிற்கின்றது.

தமிழ் இலக்கணம் பகுதியில் எழுத்துக்கள் குறித்த இலக்கணம்,எழுத்து அட்டவணை
ஆகியவை உள்ளன. சங்க இலக்கிய வரலாறுசிறிய அளவில் கூறப் பெற்றுள்ளது.
சமூகப்பகுதி பக்கத்தில் உள்ள கட்டுரைகள் ஈழம் சார்பானவையாகக்
கடும்போராட்டங்களையும்,வரலாறுகளையும்,உணர்வுகளைப் பேசுபவையாகவும்
அமைந்துள்ளன.கணினித்துறை சார்பான கட்டுரைகள் இணையத்தைப் பயன்படுத்தத்
தொடங்குவோர்களுக்கு நல்ல பயனுள்ள குறிப்புகளை உள்ளடக்கி
அமைந்திருக்கிறது.வாசகர்களின் பங்களிப்பு குறைவாகவே
உள்ளது.இலக்கியங்களைப் பாது காக்கும் தளங்களில் இத்தளமும் ஒன்று.


blog.selvaraj.us

 அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாக்த் தன்
அனுபவத்தை"மெல்லச்சுழலுது காலம்" எனும் நூலாக வெளியிட்ட இரா.செல்வராசு
வின் இணையதளமிது."விரிவெளித்தடங்கள்" எனும் பெயரோடு இத்தளம்
அமைந்துள்ளது.வாசகர்கள் அதிகம் வாசித்த இணையதளமாகவும் இது திகழ்கிறது.
ஆறு கவிதைகள் பதிவிடப்பெற்றிருக்கின்றன.அவை வடிவ முறையிலும், சொல்
முறையிலும் நாட்டுப்புற வழக்கை ஒத்து இருக்கின்றன்.சமூகத்தைச்சாடல் இலை
மறை காயாகக் கையாளப் பெற்றுள்ளது.இணையம்,இலக்கியம்,கடிதங்கள்,
கணிநுட்பம்,கண்மணிகள்,கவிதைகள்,கொங்கு,சமூகம்,சிறுகதை,தமிழ்,
திரைப்படம்,பயணங்கள்,பொது,பொருள்பால்,யூனிக்கோடு,வாழ்க்கை,
வேதிப்பொறியியல் என 17 தலைப்புகளின் கீழ் 269
பதிவுகளைச்செய்திருக்கின்றார். கிட்டத்தட்ட 2500க்கும்
மேற்ப்பட்டவர்கள்படைப்புகள் பற்றி விமர்சனம் எழுதி உள்ளனர்.

சமகால வாழ்வில் நடைபெறும் உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளைச்சிலர் சாதாரணமாக
நினைத்து மறந்து விடலாம்.ஆனால், இப்படைப்பாளர் சிறிய உணர்வுகளைக்கூட தன்
படைப்பாக்கத் திறனால் அழகுற அமைத்துத் தந்துள்ளார்.அதிகப்படைப்புகளில்
தன் சுயத்தை மட்டுமே படைப்பாக்கம் செய்திருக்கின்றார்.சொல்
ஆராய்ச்சியிலும் ,சொல் விளையாட்டிலும் மேம்பட்டவராக இப்படைப்பாளரைக்
கூறலாம்."வால்வே மாயம்","நடுவுல கொஞ்சம் கள்ளக் காணோம்" போன்றவற்றை
எடுத்துக்காட்டாய்
கூறமுடியும்.

ஈழத்தமிழர்களின் இணையத்தளங்கள்

அயலகத் தமிழ்ப் படைப்பாளிகளில் பெரும் பங்கினர் ஈழத்தமிழ்
நிலத்தைச்சார்ந்தவர்களாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.அந்தளவிற்குப்
பெரும்பான்மை இணையதளங்கள்,வலைப்பூக்கள் இருக்கின்றன.ஈழத்தில் இருந்து
புலம் பெயர்ந்தவர்களும் ஈழத்தில் தற்போது வசிப்பவர்களும் தங்கள் தளத்தில்
மற்ற படைப்பாளர்களின்  தளங்களைத் தொடர்பு  படுத்தி வைத்திருப்பது உலக
மக்களின் கவனத்தை ஈழம் சார்பான் இலக்கியங்களை வாசிக்க வைக்க வேண்டும்
என்ற எண்ணத்தைக் காண முடிகின்றது.படைப்பாளர்களைத் துதிபாடுவதும்,வசை
மொழிவதும் காணக் கிடைத்தில.

ஈழ நாட்டின் பிரச்சனைகளை முன் வைத்து பல்வேறு படைப்புகள் வந்தாலும்
ஈழத்தமிழர்களின் தளங்களில் செய்தித் தளங்களேஅதிகமாக இருக்கின்றன.
இதற்க்குக் காரணம் தங்களின் உறவுகளுக்கும்,பிற நாட்டில் வாழும்
தமிழர்களுக்கும் உடனுக்குடன் செய்திகள் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே
காரணமாக இருக்கலாம்.சரி பாதி குழும வலைப்பதிவுகளாகவும் உள்ளன.
தமிழர்களின் ஒற்றுமை உணர்வை ஈழத்தமிழ்ப் படைப்பாளர்களின் வழி அறிய
முடிகின்றது.அயலகத்தில் இருந்தாலும்அவர்கள் தாங்கள் வாழ்ந்த ஊர், பள்ளி,
கல்லூரி,ஆகியவற்றின் நலனுக்காக ஒன்று சேர்ந்து பண உதவியும்
பெருமையினையும் செய்து வருகின்றனர் என்பது அவர்களின் படைப்புகள் வழி அறிய
முடிகிறது.


வேற்று மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்களைக்காட்டிலும் தமிழ்
இலக்கியங்கள் குறைவாகவே பதிவிடப் பெறுகின்றன.
என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் எழும்பிக் கொண்டிருந்தாலும் ,தமிழில்
எழுதப்பெற்றவைகளும்,பதிவிடப்பெற்றவைகளும்
காலம் காலமாய் நின்று தமிழர்களின் வரலாறுகளைப்   பறை  சாற்றும் என்பதில்
ஐயமில்லை.தமிழகப்பதிவர்களை விட அயலகத் தமிழ் பதிவர்கள் அதிகமாகவே
தமிழ்ப்பணி செய்கின்றனர்  என்பது இணையதளங்களை வாசிப்பவர்களுக்கு நன்றாகத்
தெரிந்த விசயமாகவே இருக்கும்.


-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-



கட்டுரையாளர்:
செ.சு.நா.சந்திரசேகரன்.எம்.ஏ.,எம்.ஏ.,எம்.பில்.,(முனைவர்)
 தமிழ்ப் பேராசிரியர்,
 ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
  திருநின்றவூர்,602024
  இ-மெயில் முகவரி----chandrakavin@gmail.com,

                                         chandra_ssn@yahoo.in
  செல்பேசி எண்------------9283275782
*சிற்றிதழ் கவிஞர்களின் படைப்பாளுமை*
            *செ.சு.நா.சந்திரசேகரன்*.எம்.ஏ.,எம்.ஏ.,எம்.பில்.,
            முனைவர் பட்ட ஆய்வாளர்.,(பகுதி)
            மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
            திருநெல்வேலி.

நவீன இலக்கியத்தினை இக்காலகட்டத்தில் முன்னெடுத்துச்செல்லும்
சாதனமாகச்சிற்றிதழ்கள் விளங்குகின்றன.பேரிதழ்கள் வணிகமுறையிலானப் பாதையில்
செல்லும் நிலையில்,படைப்பாளர்களின் படைப்புத்திறனைக் கவனத்தில்
கொள்ளாது,பெரும்பாலான வாசகர்களின் மனநிலையை மட்டும் கருத்தில்
கொள்கின்றன.இதற்கு மாறாகஇச்சிற்றிதழ்கள் படைப்பின்
திறன்,பரிசோதனைமுயற்சி,உலகத்தரம், போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு
இலக்கியத்தினையும்,இலக்கியத் தரத்தினையும் மேம்படுத்துகின்றன.சிற்றிதழ்களின்
இயல்பினைப் பொள்ளாச்சி நசன் கூறும் போது,"நுட்பமும் ,  ஆளுமையும் விரிந்த
மனப்பான்மையும் உடைய இதழாளர்களின் இதழ்கள் வரலாற்று
வரிசைச்சிற்றிதழ்களாகின்றன.நேருக்கு நேர் தாங்கள் காணும் உண்மை நிகழ்வுகளை
எழுத்தாக்கியும் பல்வேறு மொழிகளுக்கு இடையிலான ஒப்புமையையும் அதன் சாரத்தையும்
கொண்டு இதழுக்கான குறிப்பிட்டமொழியின் ஆளுமையுடன் கூடிய நுணுக்கமும் இலக்கிய
வடிவங்களை நுணுக்கி விவரிக்கும் பாங்கும் சிற்றிதழ்களின் சிறப்பு
இயல்புகளாகின்றன."(1) என்பார்.

சிற்றிதழ் கவிஞர்களின் புத்திலக்கியப் படைப்பில்,அவர்களின் படைப்பாளுமை
எவ்விதம் அமைகின்றன என்பதைக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.படைப்பைப்
பொறுத்தமட்டில் படைப்பாளனின் ஆளுமை இல்லாது எவ்விதப் படைப்பும்
வெளிவந்துவிடாது. சமூகத்தில்,தன் உள்ளத்திற்குள்,தான்
காணும்/சிந்திக்கும்/விரும்பும்/வெறுக்கும் ஒன்றையே படைப்பாக
வெளிக்கொணரமுயல்கின்றான்.இதற்குப் ப்ராய்டின் கோட்பாட்டின் படி அவனது மூன்று
நிலை மனதும் உதவுகின்றன.எதைச்சொல்லப்போகிறோம் என்பதை அவனது அனுபவமும்,அறிவும்
முடிவு செய்கின்றன. எனவே படைப்பின் அடி நாதமாக விளங்குகின்றவை படைப்பாளனின்
ஆளுமையாகத் தான் இருக்க முடியும்.புறமும் அகமுமான அமைப்பிலிருந்தே மானுடத்
துறைகள் தோன்றுகின்றன என அமைப்பியல்வாதிகளும் தம் கருத்தினை முன்வைக்கின்றனர்.
இவ்விதம் தம் படைப்பாளுமையைப் பல கோணங்களில் படைப்பாளர்கள் பதிவு
செய்கின்றனர்.இருப்பினும் இக்கட்டுரையில் ஆய்வு எல்லை கருதி படைப்பாளுமையில்
தாம் கண்ட வறுமைச்சூழ்நிலைகளை மட்டும் காணலாம்.

ஆளுமைத்தன்மை
படைப்பு,படைப்பாளன் ஆகிய இரண்டிற்குமான தொடர்பே இலக்கிய ஆளுமை
எனலாம்.படைப்பிற்கு உந்தப்படும் மன எழுச்சி,தன்னாளுமையாகப் படைப்பில்
மலர்கின்றது.ஆளூமை குறித்து ஆல்போர்ட் எனும் அறிஞர் கூறும் போது,"ஒவ்வொரு
மனிதனிடமும் குறிப்பிட்ட ஒரு வகையில் அவனது உடல் மனப்பண்புகள் சேர்ந்து
ஒருங்கமைந்து இருக்கும்.
இவ்வொருங்கமைப்பின் இயல்பு மனிதனுக்கு மனிதன் சிறிதேனும்
மாறுபட்டிருக்கும்.தனி மனிதன் ஒருவன் தன் சூழ்நிலையில்
எவ்வாறு செயல்படுகின்றான் என்பது இவ்வொருங்கமைப்பின் தன்மையைப் பொறுத்ததாகும்.
இத்தகைய உடல் ,மனப்பண்புகளின்
தனிப்பட்ட ஒருங்ககமைப்பு ஒருவனது ஆளுமையாகும்."(2)என்பார்.

வறுமை நிலையினைக் காட்டும் ஆளுமை
சிற்றிதழ் படைப்பாளர்கள்,தம் படைப்புகளில் அதிகமான அளவில் சமுதாயவியல் சிந்தனை
கொண்ட கவிதைகளைப் படைத்துள்ளனர்.அதிலும் வறுமைஸ் சூழ்நிலை அவர்கள் மனதில்
பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளன.வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும்
மானுட உணர்வுகளை எண்ணி வருந்தி உழல்பவர்களாக இவர்கள் மன நிலை உள்ளது.இம்மன
நிலையினை வாசகனுக்குக் கவிதைகளாகக் கடத்துகின்றான் கவிஞன்.இந்நிலையில்
முழுதும் வெற்றி பெற்ற படைப்பு ஆகிறது.கரிகாலன் தமது  வேதனை எனும் கவிதையில்,

        " வறுமையின் கொடுமையில்
         வாடிக் கிடக்கும் பெண்ணின்
         வரண்ட மார்பில்
         சுரக்காத பாலுக்காக்
         சுவைத்துக் கொண்டிருக்கும்
         குழந்தை."(3)
என்கின்றார் .குழந்தையின் தேவை, தாயின் இயலாமை, இவர்களிருவரிடத்திலும் ஊடாடும்
உணர்வுகள் படைப்பாளரின்
உள்ளத்தைக் கசக்கிப் பிழிகின்றன.எதார்த்தமுறையில் அதனைக்
காட்சிப்படுத்துகிறார். காட்சிக்குப் பின்புலத்தில் உள்ள
உணர்வே தலைப்பாகிறது.வாசகன் மனதில் இந்த உணர்வுகள் இன்னும் பல உணர்வுகளைத்
தோற்றுவிக்கின்றன.
        " நெய்திட்ட நூலை விட
         தைத்திட்ட நூல் அதிகம்
         ஏழையின் உடை.  ''(4)

எனும் கவிதை ஏழை நெசவாளியின் வறுமையினை விளக்குகிறது.சமூகத்தில் தான் காணும்
காட்சிகளைப் படைப்பாளன்
ஆழ்ந்து சிந்தித்து அதனைத் தன் படைப்பாளுமையால் பதிவு செய்கின்றான்.இதுவே
படைப்பாளனையும் படைப்பையும்
பிறவற்றிலிருந்து மேம்பட வைக்கின்றது."கலைஞர்கள் கலை பற்றிய ஆழ்ந்து அகன்ற
கண்ணோட்டத்தினை
 உடையவர்களாக,தம்மைச்சுற்றிக் காணப்படுகின்ற புறவுலகத்தைப் பற்றி அதிகம்
சிந்திப்பவர்களாகத் திகழ வேண்டும்.
இத்தகைய அணுகுமுறையே ஏனைய துறைகளிலிருந்து கலையை வேறுபடுத்திக்
காட்டுகிறது."(5) என்ற அறிஞரின்
கருத்தை இங்கு படைப்பாளுமையின் திறன் குறித்துக் கூறுவதோடு ஒப்பு நோக்கலாம்.

படைப்பாளுமையின் மற்றொரு கூறாக்ப், படைப்பில் கதாபாத்திரத்தையே உலவ விடுவதைக்
காணமுடிகின்றது.காட்சிகள்
தந்த உணர்வுகளைத் தானே கூறாமல் கதாபாத்திரத்தையே நேரடியாக வாசகனோடு பேச
விடுவது சிறந்த ஆளுமையாக
உணர முடிகின்றது.அவ்வாறாக,
       "இஸ்கூலுக்குப் போற ஆசை
        இனி எனக்கு
        வரவே வராது.
        சாகற வரைக்கும்
        தீக்குச்சி கம்பெனி தான்
        ஏன்னா.....
        வேற எடமே இல்லை
        எந் தொடையில
        அப்பா போடும்
      ' அதை' வாங்கிக்க...."(6)
இக்கவிதை அமைகிறது அப்பா, மகன், கம்பெனி,பள்ளி,சூடு இவை தான் இக்கவிதைக்குள்
ஊடுறுவி நிற்கும் காரணிகள்.
இவை ஒவ்வொன்றும் வாசகனுக்குள் வெவ்வேறான சோகக் கிளைகளை உருவாக்கிப் பல கதைகளை
உண்டு பண்ணுகின்றன.
இதே போல்,
        ''வறுமையே
         உன்னை எந்தாயினைப் போல்
         நேசிக்கின்றேன்!
         ஆம்!
         வளம் என்னை
         விரட்டியடித்த போது
         வரவேற்றது நீ தானே!"(7)
எனும் கவிதையில் வறுமையைப் பார்த்துப் பேசும் கதாபாத்திரத்தின் குரல், எதிர்
மறைச்சிந்தனையை வாசகனுக்குள்
புகுத்தி வருத்தப்பட வைக்கிறது.மலம் அள்ளும் தொழிலாளியின் வறுமையினைக்
கவிதையாக்கித் தரும் போது,
          "நாற்றம் நாசியில் ஏறிப் பிடறியில் தட்டி
           சிறுகுடல் பெருங்குடலைத் தின்னும்
           பதினொன்னாவது நாளில் பக்கிரிசாமி வருவான்
          தூக்கிப் பிடித்த ஈரத்துண்டோட நிற்பான்
          தீண்டாமலே ந்ழுவி விழும் பத்து ரூபாய்"(8)
என்கின்றார் வி.பாலு.அறிவியல் துறையில் வளர்ச்சியுற்ற பொழுதிலும்,இன்னும்
வறுமையின் பிடியில் இத்தொழிலில் ஈடுபடும்
மனிதர்களின் நிலை கொடுமையானது என்ற கருத்து வெளிப்படுகிறது.

படைப்பாளுமையில்,கவிஞன் எதனையும் தன் உணர்வுக்கரங்களால் பிடித்திழுத்து
உள்ளத்தில் கிடத்தி, அதே
உணர்வோடும்,சில நேரங்களில் மிகை உணர்வோடும் வெளிப்படுத்துகின்றான்.இதை வாசகன்
தன் அனுபவத்தோடுப்
பொருத்திடத் தனக்குள் அதனை இன்னும் பெரிதாக்கி உணர்கின்றான்.ஆகக் கவிஞனின்
படைப்பாளுமை கவிதைகளை
வளமாக்கி வரலாறாக்குகின்றன.கொடுமையான வறுமை சமூகத்தில் இல்லாதிருக்க வேண்டும்
என்ற எண்ணங்கள்
சிற்றிதழ் கவிஞர்களின் படைப்பாளுமையின் ஒரு கூறாக இருக்கின்றன.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------







அடிக்குறிப்புகள்;

1.பொள்ளாச்சி நசன்,சிற்றிதழ்கள்,பக்-84-85
2.www.ilankavi.blogspot.in/2011/05/blog-post.html.
3.கரிகாலன்,நண்பர்கள் தோட்டம்,அக்-நவ-99,ப-11
4.இரா.ரவி,மனித நேய மடல்,செப்-99,ப-10
5.Marx and Engels,the german ideolgy,moscow-1968,p-95
6.ஜெ.ஜெய சக்திவேல்,கவிக்காவிரி,ஏப்-மே-97,ப-2
7.என்.வாஞ்சினாதன்,தேசிய வலிமை,மே-99,ப-13
8.வி.பாலு.சுந்தரசுகன்,ஜுன்-97,ப-96

-----------------------------------------------------------------------------------------------------------------------