Translate

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

தமிழ்ச் சிற்றிதழ் கவிதைகளில் சமுதாயப் பார்வை


“வாழ்க்கையைக் கவித்துவப் போக்கில் பிரதிபலிப்பதற்கும், அங்கதமாக எழுதிக் காட்டுவதற்கும், வாழ்க்கையைப் பற்றிய சிறந்த, தெளிந்த தத்துவத்தையும், எதிர்காலம் பற்றிய எண்ணத்தையும் கவிஞன் அல்லது எழுத்தாளன் தெளிவாகப் பெற்றிருக்க வேண்டும்.”1 என்பதிற்கேற்பச் சிற்றிதழ்கள் சமூகப் பிரக்ஞையுடன் கவிதைகளை வெளியிட்டிருப்பதைக் காண முடிகின்றது. சமூகமும் இலக்கியமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் கவிஞனால் இத்தளத்தைச் சரியாகப் பதிவு செய்ய முடிந்திருக்கிறது.
சிற்றிதழ்கள், சமகால உலக இலக்கியங்களின் தரத்திற்கு இணையாகத் தமிழ் இலக்கியங்களைக் கொண்டு செல்கின்றன என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாக அமைந்திருக்கிறது. எனவே அவ்வகைச் சிற்றிதழ்களில் சமுதாயக் கவிதைகள் எவ்விதம் பதிவு செய்யப் பெற்றிருக்கின்றன என்பதாக இவ்வாய்வு அமைந்திருக்கின்றது.
சிற்றிதழ்களின் இலக்கணம்
“நுட்பமும் ஆளுமையும் விரிந்த மனப்பான்மையும் உடைய இதழாளர்களின் இதழ்கள் வரலாற்று வரிசைச் சிற்றிதழ்களாகின்றன. நேருக்கு நேர் தாங்கள் காணும் உண்மை நிகழ்வுகளை எழுத்தாக்கியும், பல்வேறு மொழஜகளுக்கு இடையிலான ஒப்புமையையும் அதன் சாரத்தையும் கொண்டு இதழுக்கான குறிப்பிட்ட மொழியின் ஆளுமையுடன் கூடிய நுணுக்கமும் இலக்கிய வடிவங்களை நுணுக்கி விவரிக்கும் பாங்கும்-இவ்விதழ்களின் சிறப்பு இயல்புகளாகின்றன”2 என்பது சிற்றிதழ்களின் இலக்கணமாகக் கொள்ளப்படுகிறது.

சமுதாயக் கவிதைகள்

சிற்றிதழ்களில் காணலாகும் கவிதைகள் பல்திறத்தன. அவற்றில் சமுதாயக் கவிதைகள் பெரும்பங்கைப் பெற்று எழுதப் பெற்றிருக்கின்றன. அவற்றை,
1. தனிமனிதப் பிரச்சனைகள்
2. பொதுமைப் பிரச்சனைகள்
3. சமூகத் தீர்வுகள்

தனிமனிதப் பிரச்சனைகள்

சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் பல்வேறு பிரச்சனைகளையும், சந்தோசங்களையும் சமுதாயத்திலிருந்து பெறுகின்றான். இதன் விளைவாக ஏற்படும் மன உணர்வுகள் சில நேரங்களில் சமூகப் பின்னடைவையும், சில Nநுரங்களில் சமூக முன்னேற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. இதனடிப்படையில், “எந்த இலக்கியத்திற்கும் அடிப்படையான உள்ளீடாக அல்லது பொருண்மையாக மனிதனே காட்சி தருகின்றான். மனிதனின் ஆசை வேட்கைகளையும், செயல் திறனையும், வளர்ச்சி நிலையினையும் வீழ்ச்சியினையுமே இலக்கியங்கள் பிரதிபலித்து நிற்கின்றன:3 என்பரத அறிய முடிகின்றது. இவ்விதமான தனிமனிதச் சமுதாய உணர்வுக் கவிதைகள் சிற்றிதழ்களில் பெரும்பான்மையாக எழுதப் பெற்றிருக்கின்றன.
இனிமையற்ற இல்லம்
தேசத்தில் பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டுவர வேண்டிய கடப்பாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தனது நேரத்தை வீணடிக்க மாட்டான். ஆனால் இன்று சமூகத்தில் ஒவ்வொரு இல்லத்திலும் மனிதர்களின் நேரங்கள் சுரண்டப்படுகின்றன. காலங்கள் வீணாவது அறியாமல் இருக்கும் இத்தன்மையினை,
“சின்னத்திரை நம்மைச்
சிறைப் படுத்துகிறது…..
வீட்டுக் காவலில் தேசம்.”4
எனும் கவிதை கூறுகிறது. இல்லங்கள் தம் பாதுகாப்பிற்கும், தம் வசதிகளுக்காகவும் என்ற நிலைமாறி, இல்லங்களின் பாதுகாப்பிற்காக நமது சுகங்களை விட்டுத் தர வேண்டியுள்ளது. இதனை,
“வெளியூருக்குப் போனாலும்
வீட்டு ஞாபகமாகவே இருக்கின்றது.
திருட்டுப் பயம்”5
இக்கவிதை விளக்குகின்றது. பிறர் பொருளைக் கவர்ந்து தவறான வாழ்க்கை வாழும் மனப் போக்கு இச்சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது. இதன் மூலம் முழுமையான சந்தோசங்களை அனுபவிக்க முடியாமல் மனித மனங்கள் பாடுபடுகின்றன.
“பூக்கத் தயாராய்
தங்கை
கவலைகளும்”6
என்ற கவிதை, மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்தல், திருமணம், வரதட்சணை, சந்தோசமான. இவ்வாழ்க்கை இவற்றின் மேலுள்ள பயத்தை வெளிப்படுத்துகின்றது. சுயமற்ற வாழ்வை,
“என்னை
அழகு செய்வதாய் நினைத்து
வண்ணக் கலவையை
அள்ளிப்பூசி
இன்று பறக்கக் கூட
சிறகுகளை விரிக்க முடியாமல்
நான்”7
இக்கவிதை வெளிப்படுத்துகிறது. தன் அனுபவங்களே கவிதையின் உள்ளார்ந்த பொருளாகிறது என்பதையும், அதுவே சமூகத்தின் உண்மைப் பொருளாகின்றது என்பதை, “தமிழ்க் கவிதைகளைப் பொறுத்தமட்டிலும் கவிதை உண்மைதான் கவிதைக்கு ஓர் உயர்ந்த தரத்தை நல்குகின்றது. கவிஞன் கூறும் உண்மை நாம் உலகில் காணும் உண்மையைப் போன்றதன்று, அவன் கூறும் உண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை உரைப்பது”8 என்ற அறிஞரின் கூற்று மெய்ப்பிக்கின்றது. தனி மனிதனின் வேதனைகளில் உயர்நிலையில் அமைந்த கவிதையாக,
“வறுமையின் கொடுமையில்
வாடிக் கிடக்கும் பெண்ணின் வறண்ட மார்பில்
சுரக்காத பாலுக்காக சுவைத்துக் கொண்டிருக்கும்
குழந்தை – அதனை மானமற்று மறைந்து
மானப்பார்வை பார்க்கும் காமுகன்”9
என்ற கவிதையைக் கூறலாம். சமூகத்தில் பாலியல் வன்கொடுமைகளும், திரிந்துபட்ட மனவுணர்வுகளுமாக இருக்கும் மனிதர்களை நினைத்து வேதனைப்படும் தனிமனித விரக்தியை இக்கவிதை வெளிப்படுத்துகிறது.

2.பொதுமைப் பிரச்சனைகள்

“மனித சுதந்திரம், மனித மகிழ்ச்சி ஆகியன பற்றிய கருத்துகளே சிறந்த இலக்கியங்களின் கருவாக அமைய முடியும். வாழ்வின் இன்றியமையாத கூறுகளைப் பிரதிபலித்துக் காலந்தோறும் மனித சமுதாயம் எந்த எந்தப் பாதைகளின் வழியாக நடைபயின்றது என்பதைத் தௌ;ளத் தெளிவாக் காட்டி நிற்கும் கலைப் படைப்புகளே சாகவரம் பெற்று நீண்ட நாட்கள் வாழ்கின்றன.”10
சமூகத்தின் பொதுமையான பிரச்சனைகளையும் கவிஞன் தன் கவிதையின் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றான். அவ்வாறான கவிதையாக,
“பொதி சுமக்கும்
மலர்கள்
மெட்ரிக் குழந்தைகள்”11
எனும் கவிதையமைகிறது. பொதி சுமப்பது கழுதைகளாகலாம். ஆனால் பிஞ்சுக் குழந்தைகள் பாட நூல்களைச் சுமந்து செல்லுவது கவிஞனின் மனதைச் சுடுகிறது. மலர் பொதி சுமப்பது கண்டு, தாங்காது கதறுகிறார். வறுமையை விட்டொழிக்க வேறு வழியில்லாத தாய் வேதனையின் உச்சக் கட்டத்தில்,
“அழு!மகனே!அழு!
கண்ணீர் கடலாகட்டும்!
உப்பு விற்றாவது
பிழைக்கலாம்”12
என்று கூறுகின்றாள். சமுதாயத்தின் இழி குரலாக இது காட்ட படுகின்றது.
“எமன் ஓய்வாகி விட்டானா?
உயிர் பறிப்பு செய்கிறதே
மதங்கள்.”13
“வரதட்சனைத் வில்லொடிக்க
வரவில்லை எந்த இராமனும் முதிர் கன்னிகளாய்     சீதைகள்”14
                     “கோவலனைத் தேடிச் சென்ற கண்ணகி
காவல்துறை ஏற்பாட்டில்
விபச்சார ஒழிப்புச் சட்டத்தில்
கைது செய்யப்பட்டாள்”15
“பூப்பெய்தியதுமே
வெட்டி எறியப்பட்ட
சுதந்திரச் சிறகுகள்”16
போன்ற கவிதைகள் சமூகப் பிரச்சனைகளான வரதட்சணை, மதக்காழ்ப்பு, நீதி, சுதந்திரமின்மை எனப் பல தளங்களில் எழுதப் பெற்றிருக்கின்றன.


சமூகத் தீர்வுகள்

கவிதைகள், பல்வேறுபட்ட பிரச்சனைகளின் பாதிப்பாக .இருந்தாலும், அக்கவிதைகளில் எதிர்காலச் சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆசையினையும் கவிஞர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
“சமரச வார்த்தைகளின்
களிம்புகளை நிராகரித்த
எங்கள் கோபம்
சமத்துவ தீர்வுகளுக்காய்
இன்னும் எரிகிறது”17
                     “மனிதம் இல்லா வாழ்க்கை
மனிதன் வாழ்ந்தால்
மனிதத்திற்கே மரணம்”18
எனும் கவிதைகள் சமூகத் தீர்வைத் தருவதாக அமைகின்றது. மனிதர்கள் மனதளவிலும், உடலளவிலும் தீய எண்ணங்கள் கொண்டவர்களாகயிருக்கின்றார்கள். எனவே இவை களையப் பட வேண்டும் என்ற தீர்வை முன்வைக்கும் கவிதையாக,
“அடிக்கடி வந்துபோ மழையே….
குளமில்லா ஊரில்
அழுக்காய் மனிதர்கள்!”19
இக்கவிதை அமைந்திருக்கிறது.
“எரிக்க வேண்டிய
சாதிக் குப்பைகள் பொசுக்க வேண்டிய
பொய்மை ஏடுகள் அழிக்க வேண்டிய
அபத்தஙகள் அன்றாடம் அதிகமாகிக் கொண்டே    வருகின்றன

அதனால் நான் ஓர் தீப்பற்தமாகவாவது
இருக்க வேண்டி முயல்கின்றறேன்”20
எனும் கவிதையில் சமூகத்தைத் தூய்மையாக்கப்பட வேண்டுமென்றால் தீமைகளை அழித்துவிட எரித்துவிட வேண்டும் என்று கவிஞர் தீர்வு கண்டிருக்கின்றார்.
சிற்றிதழ் கவிதைகளில் சமுதாயப் பின்னணியில் அமைந்த கவிதைகள் அளவில் பெருமளவாக இருப்பதைக் கவனிக்க முடிகின்றது அவற்றில் தனிமனித வெளிப்பாட்டுச் சிந்தனைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. சமூகத் தீர்வுகளையும் கவிஞனே தன் கவிதை மூலமாக வெளிப்படுத்துகிறான். சமூகமும், இலக்கியமும் ஒன்றிலிருந்து ஒன்று பெறுமானால் கவிஞர்களின் தீர்வுப்படி நல்ல சமூகமாக எதிர்காலம் அமையும்.

அடிக்குறிப்புகள்

1.ஜி.ஜான் சாமுவேல்,”இலக்கியத்தில் சமுதாயப் பார்வை”, ப-101
2.பொள்ளாச்சி நசன், “சிற்றிதழ்கள்”, பக்-84-85
3.ஜி.ஜான் சாமுவேல், “இலக்கியத்தில் சமுதாயப் பார்வை”, ப-33
4.கா.நா.கல்யாணசுந்தரம், “கவிதை உறவு”, ஏப்ரல்-97, ப-6
5.பொன்.குமார், ‘சிகரம’, மே-99, ப-16
6.வலம்புரி.லேனா, ‘கல்வெட்டுப்பேசுகிறது’, சூலை-98, ப-7
7.தேவநாதன், ‘நண்பர்கள் தோட்டம்’, ஜீலை-99,ப-2
8.ந.சுப்புரெட்டியார், ‘பாட்டுத் திறன்’, ப-30
9.கரிகாலன், ‘நண்பர்கள் தோட்டம்’, அக்-நவம்-99, ப-11
10.ஜி.ஜான் சாமுவேல், “இலக்கியத்தில் சமுதாயப் பார்வை”, ப-110
11.மாடக்குளம் விஜயகுமார், ‘தேசிய வலிமை’, டிசம்-98, ப-10
12.என்.வாஞ்சிநாதன், ‘தேசிய வலிமை’, டிசம்-98,ப-10
13.ஓவியா, ‘ஓடம’, செப்-97, ப-11
14.இனியவன், ‘கல்வெட்டுப் பேசுகிறது’, ப-16
15.டி.மருது பாண்டியன், ‘தேசிய வலிமை’, மார்ச்-99, ப-4
16.சூரியதாஸ், ‘ஓடம்’, ஏப்-மே-97, ப-22
17.மு.முருகேஷ், ‘ஓடம்’, சூன்-97, ப-2
18.சுரா. ‘தேசிய வலிமை’, ப-9
19.ஜெ.பி.சிருஷ், ‘ஒளிநெறி’, ஜன-98, ப-24 ;
20.        ‘கல்வெட்டுப் பேசுகிறது’, நவம்-97, ப-10

புதன், 9 டிசம்பர், 2015

தமிழ்ச் சிற்றிதழ்க் கவிதைகளில்-கண்கள்
                                                     செ .சு.நா.சந்திரசேகரன் 

“கற்று வைத்திருந்த
கலைகள் அனைத்தும்
மறந்து போனது
கண்கள் செய்யும்
கண்கள் முன்பு.”

விஞ்ஞானத்தின் எந்தவொரு சிகரத்திலும் நின்று செய்தாலும் செய்ய முடியாத ஒரு அற்புதப் படைப்பு உலக உயிர்களின் உடல். அந்த உடலின் முதன்மையானதாகவும் மற்ற உறுப்பகளுக்கு மூலகாரணமாக அமைந்து இருப்பது கண்கள் ஆகும். அவ்விதமான கண்கள் குறித்துத் தமிழ்ச் சிற்றிதழ் கவிதைகளில் புனையப்படும் திறன் குறித்துக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ்ச் சிற்றிதழ்கள்

இருபதாம் நூற்றாண்டு தொட்டுத் தமிழில் மேம்பட்ட இலக்கியங்களைப் படைப்பதற்கென்றே ஆயிரக்கணக்கில் ஆண்டுதோறும் தோன்றும் அறிவுசார் இதழ்களைச் சிற்றிதழ்கள் எனலாம். அச்சு இதழாகவும், இணைய இதழ்களாகவும், வலைப்பூக்களாகவும் இவை பரிணாமம் பெற்றிருப்பதை உணர முடிகின்றது. சிறய வாசக வட்டத்திகு மட்டும் குறுகிய எண்ணிக்கை அளவில் அச்சிடப்படுவதால் மட்டுமே இவை சிற்றிதழ்கள் என அழைக்கப்படுகின்றன.
இவ்வகைச் சிற்றிதழ்களில் கண்கள்-குறித்தான கவிதைகள் ஏராளமாக எழுதப் பெற்றிருக்கின்றன. இவற்றை,
1. கண்கள்-குறித்தான தனிநிலைக்கவிதைகள்
2. கண்கள-குறித்தான சார்புநிலைக்கவிதைகள்
என இருவகைப்பாட்டில் காண முடிகின்றது.

தனிநிலைக் கவிதைகள்
தனிப்பட்ட நிலையில் கண்களைத் தனது கவிதைக்குள் கொண்டுவர முனையும் கவிஞன், பழைய மரபாக்கங்களோடு புதிய கற்பனையில் கண்களை உட்படுத்தும் கவிதைகளையே தனிநிலைக் கவிதைகள் எனலாம்ஃ நேரடியாகக் கண்களை மட்டும் பாடுபொருளாகக் கொண்டவை இவை.
சிற்றிதழ் கவிதைகளில் கண்கள் நேரடிக் காட்சிகளை அப்படியே பதிவிக்கும் கருவியாகக் காணாமல் உலக அறிவு, காதல், பாசம், ஏக்கம், வெறுப்பு, உண்மையென விரிந்த தளங்களை உள்வாங்கும் காரணியாக அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. கண்மூடிச் சிந்திக்கும் தருணங்களில் அனுபவப்பதிவு அல்லது கற்பித்தல் பதிவினால் பெறப்படும் உண்மைநிலையினை எண்ணிக் கவிதைகள் குதூகலமாக-துக்கமாக வெளிப்படுத்தப் பெறுகின்றன. எனவே காட்சிக்காக காணும் கண் வாழ்வு நகர்த்துதலில் தவறுகள் செய்வதாகவே பெரும்பாலான கவிஞர்கள் கண் மீது குற்றம் சாற்றுகிறார்கள். உலகில் நடக்கும் வசதி இல்லது வசதியின்மைக் காரியங்களில் நடக்கும் போலித்துவங்களை உணர்ந்தும் உணராதிருப்பதாக் கண்ணைப் பல கவிஞர்கள் உணர்;த்துகிறார்கள். என்னைத் தேடி எனும் கவிதையொன்றில், எங்கெங்கோ
அலைகின்றேன்
என்னைத்தேடி…..!
இறுதியில் ஒரு சுடர்
எனக்குள் உயர்ந்து
மூடிய விழிகளுக்குள்
பார்க்கத் துவங்கினேன்.  2
வானம் தொட்டது பார்வை!
இமைக்குள் புதைந்தது விழி! 3
என உள்முகப் பார்வையிலேயே தெளிவு கிடைத்ததாகவும், வெளிப்பார்வைத் தன்னை இனம் காட்டவில்லை எனவும் விளக்குகிறார். மானுட வாழ்க்கை இருவகை அமைப்புக்களைக் கொண்ட ஒரு முழுப் பொருண்மை: புறத்தே தோன்றும் ஒவ்வொரு வகையான வாழ்க்கை நிலைக்கும் அடிப்படையான அக அமைப்பு ஒன்று உண்டு. புற அமைப்பின் செயல்பாடு: அக அமைப்பின் வெளிப்பாடு தானே தவிர தன்னிச்சையாக இயங்க வல்லதன்று: இப்புற வெளிப்பாடு அவ்வப்போது மாறி இயங்கும் 4 என்ற அமைப்பியல்வாதக் கோட்பாட்டை இங்கு ஒப்புநோக்கலாம். கவிதைப் படைப்பின் அடித்தளப் பரப்பாக இது அமைகிறது. போலித்துவத்தைச் சொல்ல வந்த கவிஞன்,
கண்களைக்
களவு கொடுத்துவிட்டு
கனவுகளைக் கருத்தரிக்கும்
ஏமாற்றப் பொழுதுகள்
என்கின்றார் கண்களை அவனுக்கே தெரியாமல் பிறர் எடுக்க அனுமதித்து விட்டுக் கனவு காணவைத்து ஏமாற்றப்படுவழத உணர்வுப் பூர்வமாக இக்கவிதை விளக்குகிறது.

முரண்பொருள் கண்கள்
வறுமை எனும் தலைப்பிலமைந்த கவிதை முரண்பொரு தன்மையில் எழுதியிருப்பதைக் காண முடிகின்றது. கிணறு வெட்டினால் தண்ணீர் பெருக்கெடுக்கும். விவசாயம் செய்யலாம். ஆனால் முழுமையாகக் கிணறு வெட்டும் முன்னரே என்ன நடந்தது என்பதை,
ஏழை விவசாயி
கிணறு வெட்டினான்
தண்ணீர்
பெருக்கோடியது
கண்களில் இருந்து
என இக்கவிதை விளக்குகிறதுஃ கண்ணீரைப் படிமமாக்கிக் மற்றுமொரு கவிதையில், விழியில் வழியும் வெள்ளை இரத்தம். கண்ணில் ஜனிக்கும் உப்புநதி என்கின்றார் கவிஞர்.

கவிதை தரும் கண்கள்
பெரும்பான்மைக் கவிஞர்கள் கண்கள் தான் தனக்குக் கவிதைகளைத் தருகிறது எனத் தன் கவிதைகளில் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்கள் கண்கள் தன் மனதில் கற்பனைகளை ஓடவிடுகிறது என்பதை,
என்
கண்ணிலும் மனதிலும்
ஒரு கம்பளிப் புழுவாய்
என் கவிதை முளைவிடும்
இக்கவிதை விளக்குகிறது.

காதல் தரும் கண்கள்
மனித உள்ளத்தில் காதல் மரலக்கண்களே முதல் காரணமாக அமைகின்றதுஃ காதலைச் சொல்ல வரும் கவிஞர்கள் கண்களைக் கவிபுனையாமல் செல்வதில்லை எனுமளவு காதல் கவிதைகள் கண்கள் குறித்துப் பேசுகின்றன.
நீ கண்களால்
இதயக் கதவை
உடைத்த பிறகும்
உள்ளே
ஒளிந்து கொண்டவன் நான..
கல்லாய் கிடந்த என்னை
கவிஞன் ஆக்கிய காதலியே
அதென்ன?
உன் கண்களுக்கு மட்டும்
மனதை மத்திட்டுக் கடையும்
மந்திர சக்தி.

காமம் தரும் கண்கள்
உலகில் நல்லதையும், தீயதையும் நம் அறிவுக்குள் கொண்டு செல்வது கண்கள் தான். அவ்வகையில் தன் மனதிற்குள் எழும் தீய பார்வையினால் பிறரைக் காமப்பார்வைப் பார்க்கும் போது, ஏற்படும் இன்னல்களையும் அதனால் ஏற்படும் மனக்கசப்புகளையும் கவிதைகளின் பாடுபொருளாகக் காண முடிகின்றது. அவ்வாறான கவிதைகளாக,
தொடை மொய்க்கும் கண்களையும்
கண்களாலும்
பிரதியெடுக்கும் ஆண்களின்
பார்வைகளைக் கூட்டித்தள்ளு
துடைப்ப மொன்றால்
அன்றைய முடிவில்
புத்தம் புது முலையில்
நிறைய விழிகள் படிந்து விட்டது
எல்லாவற்றையும் உதிர்த்துக்
கைகளில் போட்டுக் குலுக்கினாள்.
இவற்றைக் காணலாம்.

சார்புநிலைக் கவிதைகள்
கண்ணைக்குறித்து நேரடியாகக் கூறாது. கண்ணோடு தொடர்புடையதானவற்றைச் சார்பு நிலைக் கவிதைகள் எனப்பகுத்துக் கொள்ளலாம். பார்வைகளினால் சமூக அவலங்கள், பிரச்சனைகள், உறவுகள், பாசம், இரக்கமென எல்லா கூறுகளும் இனம் பிரித்து அறிய முடிகின்றது. அவை கவிதைகளில் எவ்விதம் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பதை ஆராயும் போது தனி நிலைக் கவிதைகளைக் காட்டிலிலும் அதிகமாகவே எழுதப் பெற்றிருக்கின்றன. கண்ணை உருவமாகவும், படிமமாகவும், குறியீடுகளாகவும் மற்றும் பல கோணங்களில் பயன்படுத்தி எழுதியுள்ளனர். அவைகள் புறப்பொருள்களை மையம் வைத்த கவிதைகளாக உள்ளன. எடுத்துக்காட்டாய், கண்மலர்ச் சிரிப்பில், மனித நேய குருட்டு விழிகள், விழிகளின் ரப்பையில், விழித்தீக்குச்சிகள், கனவு விழிகளில் கரையும் நினைவுகள், விழி அரங்குகளில் கனவுகளின் நடனம், எனக் கூறப்பெற்றுள்ளன.
கண்ணுக்குத் தெரிந்த
மனித முகங்களில்
மறைக்கப்பட்ட கபடங்கள்
எல்லாமே பொய் முகங்கள்
எனும் கவிதையில் பார்வை பிழையன்று. பார்வையில் படும் பொருள் பிழையாக இருக்கின்றது. எனவேச் சரியாகப் பார்க்கக் கண்ணுக்கு அனுபவம் வேண்டும் எனக் கவிதை தொடர்கிறது. சமூகத்தில் இவ்விதம் மாறானப் பொருள்களைக் காணக் கண்ணுக்குள் கூர்மையும், சக்தியும் வேண்டுமென, இரு கண்ணில் வெப்பம் குறையும் போது,
சூரியனிடமிருந்து கடன் வாங்கு
என்ற கவிதை கூறுகிறது. கண் இருந்தும் பார்வையற்ற குறையுடையோர்கள் குறித்தும் கவிஞர்கள கவிதைகள் எழுதியுள்ளனர்.
சாலை நடுவில்
நின்று கொண்டிருந்த
இருட்டுத் தம்பதிகள்
கடந்திருப்பார்களா….
மீதிச் சாலையை இந்நேரம்
பாடிக் கொண்டு வரும்
பார்வையில்லாத
பிச்சைக் காரனுககுப் பயந்து
பத்தரிக்கையில் புதைத்த முகம்.
என்ற கவிதைகளில் உதவி செய்ய வேண்டிய நிலையிலுள்ள இருவேறு உள்ளங்கள் எப்படி நடந்து கொண்டன என்பதை மிக நுணுக்கமான முறையில் ஏக்கத்துடன் கவிஞர்கள் எழுதியுள்ளனர்.
கண்-மனித உறுப்புகளில் தலையாயது. உலகப் பொருள்களையும், நிகழ்வுகளையும் மூளைக்குள் பதிவிக்கும் அற்புதக் கருவி. அதனைத் திறனாய்ந்து வாழ்வை நடத்தும் கவிஞன் பல்வேறு நிலைகளில் அதனைக் கவிதைக்குள் பதிவு செய்ய விரும்புகிறான். தனி நிலையில் கண்ணைப் பாடம் முறையிலும், சார்பு நிலையாகப் பாடும் முறையிலும், சம அளவில் சிற்றதழ்க் கவிதைகளில் கண்-ஒரு முக்கியவத்தைப் பெற்றுள்ளது.

அடிக்குறிப்புகள்:
1. வெற்றி ஒளி, ஓடம், பிப்-மார்ச் 1997, ப-20
2. வே.சுவாமிநாதன, தேசிய வலிமை பி.99, ப-20
3. அ.அ.மணவாளன், இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள். ப-44
4. தீபன், தாராமதி, ஜன.பிப்.-97, ப-15
5. விளாங்குடி விநாயக மூர்த்தி, தேசிய வலிமை செப்.அக்.99, ப-10
6. கவி. இளங்கதிரவன, ஒளிநெறி, ஆகஸ்டு-97, ப-12
7. இன்குலாப், கல்வெட்டு பேசுகிறது. செப்.அக்.97, ப.பின்னட்டை
8. ஆர். சுரேஷ், தேசியவலிமை, பிப்.99, ப-18
9. கோனூர், வைரமணி, கவிக்காவேரி, அக்.நவம்.98, ப-12
10. இலக்குமி குமாரன் ஞானதிரவியம், சுந்தரசுகன், நவம்.97, ப-7
11. க.விநாயகமூர்த்தி, கவிக்காவேரி, மார்ச்.97, ப-6
12. அ.சுபாஷினி, சுந்தரசுகன், ஜுன்.97, ப-90
13. ம.ராஜு, நண்பர்கள் தோட்டம், ஏப்.99, ப-15
14. பாலபாரதி, தமிழ் அமிழ்தம், ப-9