தமிழ்ச் சிற்றிதழ்க் கவிதைகளில்-கண்கள்
செ .சு.நா.சந்திரசேகரன்
“கற்று வைத்திருந்த
கலைகள் அனைத்தும்
மறந்து போனது
கண்கள் செய்யும்
கண்கள் முன்பு.”
விஞ்ஞானத்தின் எந்தவொரு சிகரத்திலும் நின்று செய்தாலும் செய்ய முடியாத ஒரு அற்புதப் படைப்பு உலக உயிர்களின் உடல். அந்த உடலின் முதன்மையானதாகவும் மற்ற உறுப்பகளுக்கு மூலகாரணமாக அமைந்து இருப்பது கண்கள் ஆகும். அவ்விதமான கண்கள் குறித்துத் தமிழ்ச் சிற்றிதழ் கவிதைகளில் புனையப்படும் திறன் குறித்துக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழ்ச் சிற்றிதழ்கள்
இருபதாம் நூற்றாண்டு தொட்டுத் தமிழில் மேம்பட்ட இலக்கியங்களைப் படைப்பதற்கென்றே ஆயிரக்கணக்கில் ஆண்டுதோறும் தோன்றும் அறிவுசார் இதழ்களைச் சிற்றிதழ்கள் எனலாம். அச்சு இதழாகவும், இணைய இதழ்களாகவும், வலைப்பூக்களாகவும் இவை பரிணாமம் பெற்றிருப்பதை உணர முடிகின்றது. சிறய வாசக வட்டத்திகு மட்டும் குறுகிய எண்ணிக்கை அளவில் அச்சிடப்படுவதால் மட்டுமே இவை சிற்றிதழ்கள் என அழைக்கப்படுகின்றன.
இவ்வகைச் சிற்றிதழ்களில் கண்கள்-குறித்தான கவிதைகள் ஏராளமாக எழுதப் பெற்றிருக்கின்றன. இவற்றை,
1. கண்கள்-குறித்தான தனிநிலைக்கவிதைகள்
2. கண்கள-குறித்தான சார்புநிலைக்கவிதைகள்
என இருவகைப்பாட்டில் காண முடிகின்றது.
தனிநிலைக் கவிதைகள்
தனிப்பட்ட நிலையில் கண்களைத் தனது கவிதைக்குள் கொண்டுவர முனையும் கவிஞன், பழைய மரபாக்கங்களோடு புதிய கற்பனையில் கண்களை உட்படுத்தும் கவிதைகளையே தனிநிலைக் கவிதைகள் எனலாம்ஃ நேரடியாகக் கண்களை மட்டும் பாடுபொருளாகக் கொண்டவை இவை.
சிற்றிதழ் கவிதைகளில் கண்கள் நேரடிக் காட்சிகளை அப்படியே பதிவிக்கும் கருவியாகக் காணாமல் உலக அறிவு, காதல், பாசம், ஏக்கம், வெறுப்பு, உண்மையென விரிந்த தளங்களை உள்வாங்கும் காரணியாக அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. கண்மூடிச் சிந்திக்கும் தருணங்களில் அனுபவப்பதிவு அல்லது கற்பித்தல் பதிவினால் பெறப்படும் உண்மைநிலையினை எண்ணிக் கவிதைகள் குதூகலமாக-துக்கமாக வெளிப்படுத்தப் பெறுகின்றன. எனவே காட்சிக்காக காணும் கண் வாழ்வு நகர்த்துதலில் தவறுகள் செய்வதாகவே பெரும்பாலான கவிஞர்கள் கண் மீது குற்றம் சாற்றுகிறார்கள். உலகில் நடக்கும் வசதி இல்லது வசதியின்மைக் காரியங்களில் நடக்கும் போலித்துவங்களை உணர்ந்தும் உணராதிருப்பதாக் கண்ணைப் பல கவிஞர்கள் உணர்;த்துகிறார்கள். என்னைத் தேடி எனும் கவிதையொன்றில், எங்கெங்கோ
அலைகின்றேன்
என்னைத்தேடி…..!
இறுதியில் ஒரு சுடர்
எனக்குள் உயர்ந்து
மூடிய விழிகளுக்குள்
பார்க்கத் துவங்கினேன். 2
வானம் தொட்டது பார்வை!
இமைக்குள் புதைந்தது விழி! 3
என உள்முகப் பார்வையிலேயே தெளிவு கிடைத்ததாகவும், வெளிப்பார்வைத் தன்னை இனம் காட்டவில்லை எனவும் விளக்குகிறார். மானுட வாழ்க்கை இருவகை அமைப்புக்களைக் கொண்ட ஒரு முழுப் பொருண்மை: புறத்தே தோன்றும் ஒவ்வொரு வகையான வாழ்க்கை நிலைக்கும் அடிப்படையான அக அமைப்பு ஒன்று உண்டு. புற அமைப்பின் செயல்பாடு: அக அமைப்பின் வெளிப்பாடு தானே தவிர தன்னிச்சையாக இயங்க வல்லதன்று: இப்புற வெளிப்பாடு அவ்வப்போது மாறி இயங்கும் 4 என்ற அமைப்பியல்வாதக் கோட்பாட்டை இங்கு ஒப்புநோக்கலாம். கவிதைப் படைப்பின் அடித்தளப் பரப்பாக இது அமைகிறது. போலித்துவத்தைச் சொல்ல வந்த கவிஞன்,
கண்களைக்
களவு கொடுத்துவிட்டு
கனவுகளைக் கருத்தரிக்கும்
ஏமாற்றப் பொழுதுகள்
என்கின்றார் கண்களை அவனுக்கே தெரியாமல் பிறர் எடுக்க அனுமதித்து விட்டுக் கனவு காணவைத்து ஏமாற்றப்படுவழத உணர்வுப் பூர்வமாக இக்கவிதை விளக்குகிறது.
முரண்பொருள் கண்கள்
வறுமை எனும் தலைப்பிலமைந்த கவிதை முரண்பொரு தன்மையில் எழுதியிருப்பதைக் காண முடிகின்றது. கிணறு வெட்டினால் தண்ணீர் பெருக்கெடுக்கும். விவசாயம் செய்யலாம். ஆனால் முழுமையாகக் கிணறு வெட்டும் முன்னரே என்ன நடந்தது என்பதை,
ஏழை விவசாயி
கிணறு வெட்டினான்
தண்ணீர்
பெருக்கோடியது
கண்களில் இருந்து
என இக்கவிதை விளக்குகிறதுஃ கண்ணீரைப் படிமமாக்கிக் மற்றுமொரு கவிதையில், விழியில் வழியும் வெள்ளை இரத்தம். கண்ணில் ஜனிக்கும் உப்புநதி என்கின்றார் கவிஞர்.
கவிதை தரும் கண்கள்
பெரும்பான்மைக் கவிஞர்கள் கண்கள் தான் தனக்குக் கவிதைகளைத் தருகிறது எனத் தன் கவிதைகளில் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்கள் கண்கள் தன் மனதில் கற்பனைகளை ஓடவிடுகிறது என்பதை,
என்
கண்ணிலும் மனதிலும்
ஒரு கம்பளிப் புழுவாய்
என் கவிதை முளைவிடும்
இக்கவிதை விளக்குகிறது.
காதல் தரும் கண்கள்
மனித உள்ளத்தில் காதல் மரலக்கண்களே முதல் காரணமாக அமைகின்றதுஃ காதலைச் சொல்ல வரும் கவிஞர்கள் கண்களைக் கவிபுனையாமல் செல்வதில்லை எனுமளவு காதல் கவிதைகள் கண்கள் குறித்துப் பேசுகின்றன.
நீ கண்களால்
இதயக் கதவை
உடைத்த பிறகும்
உள்ளே
ஒளிந்து கொண்டவன் நான..
கல்லாய் கிடந்த என்னை
கவிஞன் ஆக்கிய காதலியே
அதென்ன?
உன் கண்களுக்கு மட்டும்
மனதை மத்திட்டுக் கடையும்
மந்திர சக்தி.
காமம் தரும் கண்கள்
உலகில் நல்லதையும், தீயதையும் நம் அறிவுக்குள் கொண்டு செல்வது கண்கள் தான். அவ்வகையில் தன் மனதிற்குள் எழும் தீய பார்வையினால் பிறரைக் காமப்பார்வைப் பார்க்கும் போது, ஏற்படும் இன்னல்களையும் அதனால் ஏற்படும் மனக்கசப்புகளையும் கவிதைகளின் பாடுபொருளாகக் காண முடிகின்றது. அவ்வாறான கவிதைகளாக,
தொடை மொய்க்கும் கண்களையும்
கண்களாலும்
பிரதியெடுக்கும் ஆண்களின்
பார்வைகளைக் கூட்டித்தள்ளு
துடைப்ப மொன்றால்
அன்றைய முடிவில்
புத்தம் புது முலையில்
நிறைய விழிகள் படிந்து விட்டது
எல்லாவற்றையும் உதிர்த்துக்
கைகளில் போட்டுக் குலுக்கினாள்.
இவற்றைக் காணலாம்.
சார்புநிலைக் கவிதைகள்
கண்ணைக்குறித்து நேரடியாகக் கூறாது. கண்ணோடு தொடர்புடையதானவற்றைச் சார்பு நிலைக் கவிதைகள் எனப்பகுத்துக் கொள்ளலாம். பார்வைகளினால் சமூக அவலங்கள், பிரச்சனைகள், உறவுகள், பாசம், இரக்கமென எல்லா கூறுகளும் இனம் பிரித்து அறிய முடிகின்றது. அவை கவிதைகளில் எவ்விதம் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பதை ஆராயும் போது தனி நிலைக் கவிதைகளைக் காட்டிலிலும் அதிகமாகவே எழுதப் பெற்றிருக்கின்றன. கண்ணை உருவமாகவும், படிமமாகவும், குறியீடுகளாகவும் மற்றும் பல கோணங்களில் பயன்படுத்தி எழுதியுள்ளனர். அவைகள் புறப்பொருள்களை மையம் வைத்த கவிதைகளாக உள்ளன. எடுத்துக்காட்டாய், கண்மலர்ச் சிரிப்பில், மனித நேய குருட்டு விழிகள், விழிகளின் ரப்பையில், விழித்தீக்குச்சிகள், கனவு விழிகளில் கரையும் நினைவுகள், விழி அரங்குகளில் கனவுகளின் நடனம், எனக் கூறப்பெற்றுள்ளன.
கண்ணுக்குத் தெரிந்த
மனித முகங்களில்
மறைக்கப்பட்ட கபடங்கள்
எல்லாமே பொய் முகங்கள்
எனும் கவிதையில் பார்வை பிழையன்று. பார்வையில் படும் பொருள் பிழையாக இருக்கின்றது. எனவேச் சரியாகப் பார்க்கக் கண்ணுக்கு அனுபவம் வேண்டும் எனக் கவிதை தொடர்கிறது. சமூகத்தில் இவ்விதம் மாறானப் பொருள்களைக் காணக் கண்ணுக்குள் கூர்மையும், சக்தியும் வேண்டுமென, இரு கண்ணில் வெப்பம் குறையும் போது,
சூரியனிடமிருந்து கடன் வாங்கு
என்ற கவிதை கூறுகிறது. கண் இருந்தும் பார்வையற்ற குறையுடையோர்கள் குறித்தும் கவிஞர்கள கவிதைகள் எழுதியுள்ளனர்.
சாலை நடுவில்
நின்று கொண்டிருந்த
இருட்டுத் தம்பதிகள்
கடந்திருப்பார்களா….
மீதிச் சாலையை இந்நேரம்
பாடிக் கொண்டு வரும்
பார்வையில்லாத
பிச்சைக் காரனுககுப் பயந்து
பத்தரிக்கையில் புதைத்த முகம்.
என்ற கவிதைகளில் உதவி செய்ய வேண்டிய நிலையிலுள்ள இருவேறு உள்ளங்கள் எப்படி நடந்து கொண்டன என்பதை மிக நுணுக்கமான முறையில் ஏக்கத்துடன் கவிஞர்கள் எழுதியுள்ளனர்.
கண்-மனித உறுப்புகளில் தலையாயது. உலகப் பொருள்களையும், நிகழ்வுகளையும் மூளைக்குள் பதிவிக்கும் அற்புதக் கருவி. அதனைத் திறனாய்ந்து வாழ்வை நடத்தும் கவிஞன் பல்வேறு நிலைகளில் அதனைக் கவிதைக்குள் பதிவு செய்ய விரும்புகிறான். தனி நிலையில் கண்ணைப் பாடம் முறையிலும், சார்பு நிலையாகப் பாடும் முறையிலும், சம அளவில் சிற்றதழ்க் கவிதைகளில் கண்-ஒரு முக்கியவத்தைப் பெற்றுள்ளது.
அடிக்குறிப்புகள்:
1. வெற்றி ஒளி, ஓடம், பிப்-மார்ச் 1997, ப-20
2. வே.சுவாமிநாதன, தேசிய வலிமை பி.99, ப-20
3. அ.அ.மணவாளன், இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள். ப-44
4. தீபன், தாராமதி, ஜன.பிப்.-97, ப-15
5. விளாங்குடி விநாயக மூர்த்தி, தேசிய வலிமை செப்.அக்.99, ப-10
6. கவி. இளங்கதிரவன, ஒளிநெறி, ஆகஸ்டு-97, ப-12
7. இன்குலாப், கல்வெட்டு பேசுகிறது. செப்.அக்.97, ப.பின்னட்டை
8. ஆர். சுரேஷ், தேசியவலிமை, பிப்.99, ப-18
9. கோனூர், வைரமணி, கவிக்காவேரி, அக்.நவம்.98, ப-12
10. இலக்குமி குமாரன் ஞானதிரவியம், சுந்தரசுகன், நவம்.97, ப-7
11. க.விநாயகமூர்த்தி, கவிக்காவேரி, மார்ச்.97, ப-6
12. அ.சுபாஷினி, சுந்தரசுகன், ஜுன்.97, ப-90
13. ம.ராஜு, நண்பர்கள் தோட்டம், ஏப்.99, ப-15
14. பாலபாரதி, தமிழ் அமிழ்தம், ப-9
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக